உருவாகி 8 ஆண்டுகளில் சொத்துமதிப்பில் அசுர வளர்ச்சி கண்டுவரும் ஃபேஸ்புக்
ஃபேஸ்புக் சமூக இணைய வலையமைப்பு நிறுவனம் பங்குச் சந்தை வர்த்தகத்தில் தன்னை இணைத்துக்கொள்ள முன்வந்துள்ளது.
பெரும் வளர்ச்சிகண்டுவரும் தொழிநுட்ப நிறுவனமொன்று நீண்ட இடைவெளிக்குப் பின்னர், குறிப்பாக கூகுள் நிறுவனத்துக்குப் பின்னர், பொதுமக்களையும் தனது முதலீட்டில் இணைத்துக்கொள்ள முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலீட்டாளர்களுக்கு பங்குகளை விற்பதன் மூலம் ஃபேஸ்புக்கால் இன்னும் 5 பில்லியன் டாலர்களை ஈட்டமுடியும்.
2004ம் ஆண்டில் கூகுள் நிறுவனம் பங்குச் சந்தையில் தன்னை இணைத்துக் கொண்டதிலிருந்து இணைய தொழிநுட்ப சாம்ராஜ்யத்தில் இந்தளவு ஒரு பெரிய மாற்றம் இப்போதுதான் நடக்கின்றது.
ஃபேஸ்புக்கின் மொத்த சொத்து மதிப்பில் சிறிதளவுதான் பங்கு முதலீட்டாளர்களுக்கு விற்கப்படுகின்றது. பங்கு விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை, இருந்தாலும் முழுக்கம்பனியின் பெறுமதியும் 75 முதல் 100 பில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் பங்குவிலைகள் தீர்மானிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் 30 பெரிய கம்பனிகள் வரிசையில்...
ஃபேஸ்புக் ஸ்தாபகர் மார் சூக்கர்பர்க் (வயது 27)
இந்த மாற்றத்தின் மூலம் அமெரிக்காவிலுள்ள முதல் 30 பெரிய கம்பனிகளின் வரிசையில் ஃபேஸ்புக் நிறுவனமும் இடம்பெறுகின்றது.
8 ஆண்டுகளுக்கு முன்பு, ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர் அறையொன்றிலிருந்து உருவான ஒரு சிறிய இணைய வலையமைப்புக்கு இன்று இந்த அந்தஸ்து அசுர வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பங்கு சந்தைக்குத் தன்னைத் தயார் படுத்திக்கொள்ளும் ஃபேஸ்புக், இதுவரை மற்றவர்களுக்கு தெரியாது வைத்திருந்த அதன் உள்வீட்டு ரகசியங்கள் சிலவற்றை, குறிப்பாக எவ்வளவு பணம் சம்பாதிக்கிறது எவ்வளவு லாபமீட்டுகிறது போன்ற தகவல்களை இப்போது வெளிப்படுத்தியிருக்கிறது.
ஆண்டுக்கு அதற்கு கிடைக்கும் 3.7 பில்லியன் டாலர்கள் வருமானத்தில் ஒரு பில்லியன் டாலர்களை (100 கோடி டாலர்கள்) வெறும் லாபமாக மட்டும் சம்பாதிக்கிறது என்ற உண்மை இப்போது நமக்குத் தெரியவந்திருக்கிறது.
மாதத்துக்கு சுமார் 85 கோடிப் பேர் ஃபேஸ்புக் இணைய வலையமைப்பைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால், ஃபேஸ்புக் மேல் அளவுக்கதிகமாக நம்பிக்கை வைக்கப்படுகிறது என்றும் பல விமர்சனங்கள் இருக்கின்றன.
No comments:
Post a Comment