அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், இந்தியா ஆகிய ஐந்து நாடுகளும் பல நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனமுமே பெரிய அளவிலான விண்வெளி ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.
சக்தி வாய்ந்த 5 டன்களுக்கும் மேல் எடைகொண்ட செயற்கைக் கோள்களையும், அவற்றை புவி வட்டப் பாதையில் சென்று சேர்க்கக்கூடிய ராக்கெட்டுகளையும் இந்தியாவைத் தவிர மற்ற 5 விண்வெளி நிறுவனங்களும் ஏற்கனவே வைத்துள்ளன.
இந்தியாவை பொறுத்தவரை, தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி சேவைகள் போன்ற தொடர்பாடல் தேவைகளை பூர்த்தி செய்யும் செயற்கைக் கோள்களை சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலுள்ள புவி வட்டப் பாதைக்கு எடுத்துச் செல்ல உருவாக்கப்பட்ட ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி தொடர்ந்து தோல்விகளை சந்தித்துக் கொண்டே இருக்கிறது.
கிரையோஜெனிக் தொழில்நுட்பம்
ஜிஎஸ்எல்வி ராக்கெட் இயங்க அடிப்படையானது கிரையோஜெனிக் தொழில்நுட்பம்.
மங்கள்யான் கோளை ஏந்திச் சென்ற பிஎஸ்எல்வி 24 முறை தொடர்ந்து வெற்றிகரமாக பயணித்துள்ளது.
ஆனால் இந்த செயற்கைக் கோளால் பூமிக்கு மிக அருகே இருக்கும் துருவ வட்டப் பாதையில் தான் செயற்கைக் கோளை அனுப்ப முடியும். எடைகூடிய தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்களை ஏவ ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஏரியான் ராக்கெட் சேவையை இந்தியா பயன்படுத்துகிறது.
இப்படிச் செய்வதால் அதிக பணம் செலவாகிறது. எனவே உள்நாட்டில் மாற்று ஏற்பாடுகளை செய்யும் திட்டம் தீட்டப்பட்டது.
பிஎஸ்எல்வி ராக்கெட் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு அதில் கிரையோஜெனிக் ராக்கெட்டை மூன்றாம் கட்டமாக பொருத்தி ஜிஎஸ்எல்வி உருவாக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானது என்பதாலேயே – இத் தொழில்நுட்பத்தை இந்தியா ரஷ்யாவிடம் வாங்க முயற்சித்தது. ஆனால் அது கைகூடவில்லை.
ரஷ்யா தொழில்நுட்பத்தை அளிக்காவிட்டாலும் இந்தியாவுக்கு 7 கிரையோஜெனிக் என்ஜின்களைக் கொடுத்தது. இதில் 6 ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு விட்டன. உள்நாட்டிலேயே கிரையோஜெனிக் இன்ஜின்களைத் தயாரிக்கும் பணி பெரிய அளவிலான கால தாமதங்களை சந்தித்துள்ளது.
இதுவரை 7 ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன. இதில் 6-இல் ரஷ்ய கிரையோஜெனிக் என்ஜினும் ஒன்றில் இந்திய என்ஜினும் பொருத்தப்பட்டன. இந்திய என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் உட்பட 3 ராக்கெட்டுகள் முழு தோல்வியில் முடிவடைந்தன.
மற்ற 4 முயற்சிகள் வெற்றி பெற்றதாக விண்வெளி ஆய்வு நிறுவனம் கூறகிறது. ஆனால் முதல் முதலில் 2001 இல் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி செயற்கைக் கோளை அதன் சுற்றுப் பாதைக்கு வெகு கீழாக செலுத்தியால் – அந்த முயற்சியை வெற்றியாக கருதமுடியாது என்று நோக்கர்கள் கூறுகின்றனர்.
இஸ்ரோ முன்னால் உள்ள சவால்கள்
கடந்த 2010 ஆம் ஆண்டில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவும் முயற்சி இரண்டு முறை அடுத்தடுத்து தோல்விகண்டது.
இரண்டரை ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு இந்த ஆகஸ்ட் மாதம் ஏவப்படவிருந்த ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் கடைசி நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய கிரையோஜெனிக் என்ஜின் கொண்ட இந்த ராக்கெட் வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி ஏவப்பட உள்ளது.
இந்த ராக்கெட்டில் அடிப்படையில் எவ்வித கோளாறும் இல்லை, புதிய தொழில்நுட்பத்தை கற்கும் போது சிக்கல்கள் ஏற்படுவது சகஜம் என்கிறார் ஜிஎஸ்எல்வி திட்டத்தின் இயக்குனராக பல ஆண்டுகள் பணியாற்றிய இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானி ராமகிருஷ்ணன்.
ஜிஎஸ்எல்வி ராக்கெட் திட்டத்தில் ஏற்பட்ட தோல்விகளால் ஜி சாட் தொலை தொடர்பு செயற்கைக் கோள்களை ஏவுவதில் பெரும் காலதாமதம் ஏற்பட்டு்ள்ளது. இதனால் பெருகிவரும் தொலைத்தொடர்பு சேவைகளுக்குத் தேவையான அளவு டிரான்ஸ்பாண்டர்களை அளிக்க முடியாத நிலையில் இஸ்ரோ உள்ளது.
தற்போது 40 சதவீதத்துக்கும் குறைவான தேவையே இந்திய செயற்கைக் கோள்களில் உள்ள டிரான்ஸ்பாண்டர்கள் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு வாக்கில் உள்நாட்டுத் தேவைகளுக்காக 794 டிரான்ஸ்பாண்டர்கள் தேவைப்படு்ம். ஆனால் இந்த அளவுகு டிரான்ஸ்பாண்டர்களை கொடுக்கும் நிலையில் இஸ்ரோ இல்லை.
இராணுவத்துக்குத் தேவையான பிரத்தியேக செயற்கைக் கோள்களை தயாரிக்கும் திட்டத்திலும் காலதாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
சுருக்கமாக சொல்வதானால் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அடுத்த கட்டத்துக்கு செல்வது என்பது ஜிஎஸ்எல்வியின் வெற்றியைப் பொறுத்தே அமைந்துள்ளது.
No comments:
Post a Comment